Sunday, May 29, 2016

4. திக் திக் திகில்


    ஆகஸ்ட், செப்டம்பர்களில் இந்தியன் வங்கி எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்று நேர் முகத் தேர்வில் வழக்கம் போல் படு மோசமாக சொதப்பி முடிவுக்காகக் காத்திருந்தேன்.  ஒரு நாள் என் தந்தையிடம் பத்திரம் எழுத ஒருவர் வந்திருந்தார். தந்தைக்கு நன்கு அறிமுகமானவர். வால்பாறையில் வியாபாரம். ஏதோ ஒரு பேச்சில் அவருடைய பையனுக்கு சிபாரிசு மூலம் இந்தியன் வங்கியில் பணி கிடைத்ததைப் பற்றிக் கூறினார். என் தந்தையும் என் ஆசையைத் தெரிந்து, என் பையனுக்கும் சிபாரிசு செய்ய முடியுமா? என்று கேட்டார். ஆயிரம் ருபா செலவாகும் சாமி, பரவாயில்லையா? என்று அவர் கேட்க, தந்தையும், அதுக்கென்ன, பரவாயில்லை என்று கூறினார். ஒரு நன்னாளில் நானும் அவரும் சென்னை பயணமானோம். இவைகள் அனைத்தும், நான் உதகைக்கு மாறுதலில் செல்வதற்கு முன் நிகழ்ந்தவை.

      சற்றே பாரியான தேகம். சரியாக வாராத தலை. காதுகளில் கடுக்கன். பெரும்பாலான  கைவிரல்களில் பெரிய பெரிய மோதிரங்கள். தொள தொளவென்று பெரிய கைகள், தொங்கும் பாக்கட் உடைய காமராசர் பாணி சர்ட். வேட்டி.  வெள்ளந்தியான வியாபார நோக்குடைய பேச்சு. இது தான் என்னைக் கூட்டிக் கொண்டு சென்றவரின் சாமுத்ரிகா லட்சணங்கள். சென்னை வந்தவுடன் ஸ்டேஷனுக்கு அருகிலேயே ரூம் பிடித்தோம். நான் ஏதோ பேச, அவர் ஏதோ பேச சென்னை மாநகரில் நடந்தோம். ஆரம்ப சிரம பரிகாரத்திற்குப் பின் ஆட்டோவில் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அது மழைக் காலம். எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர். பார்க்கப் போகிறவர் ஏதோ மந்திரியின் பி ஏவாம். அவரைப் பார்த்தோம். சாப்பிட ஆப்பிள் டீ கொடுத்து உபசரித்தார். விஷயத்திற்கு வந்தவுடன், அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை. வாங்கிறலாம், என்றார். அப்படியே நான் வானத்தில் பறந்தேன். நம்ம ஆள் ஆயிரம் ருபாய் கவரை நீட்டியவுடன் கூச்சத்துடன் பவ்யமாக வாங்கிக் கொண்டார். அது அந்தக் காலம். இந்த மாதிரியான கவர் கலாசாரத்தின் ஆரம்ப கட்டம். அது மேலும் மேலும் பல்கிப் பெருகியதில் என் ஆரம்பப் பங்களிப்பு என்பதை நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது.

      வங்கி அதிகாரியிடம் அறிமுகம். அந்த ஆள் எங்களை  உள்ளேயே விடவில்லை. நிற்க வைத்துப் பேசி அனுப்பி விட்டார். வேலை முடிந்தது. இரவும் வெகு நேரம் ஆகி விட்டது. மறுநாள் காலை வெஸட் கோஸ்ட் விரைவு வண்டியில் ஊர் திரும்ப திட்டம்.

          
        காலை மிகவும் முன்னதாகவே அறையைக் காலி செய்து ஸ்டேஷனுக்கு வந்தோம். ரிசர்வேஷன் எதுவும் கிடையாது. அப்பொழுது instant reservation க்கு ஒரு கவுண்டர் இருக்கும். கூட்டமும் அதிகமில்லாததால், அதில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று அந்த வரிசையில் நின்று கொண்டேன். அவரை ஓரித்தில் உட்காரச் சொல்லி விட்டேன். வரிசை மெதுவாகச் சென்று கொண்டிருந்தது.

        திடீரென்று மிகுந்த பரவசத்துடன் அவர் என்னிடம் ஓடி வந்தார். "தம்பி வாங்க போலாம். ரயிலெல்லாம் வேண்டாம். கார்ல போலாம்"என்றார்.
"என்னங்க, ரொம்ப செலவாகுமே" என்றேன். " இல்ல தம்பி, நம்ப ஒறம்பறையோட (relation)கார் ஒண்ணு  நெகமம் வரைக்கும் போகுது. எனக்கு மச்சான் முறையாகுது. அவுரு சினிமா டைரக்டரா இங்க இருக்காரு. சிவாஜி ஷீட்டிங்காம். அதிலேயே போயிறலாம்" எனறார். சினிமா எனறவுடன் நான் பின் வாங்க ஆரம்பித்தேன். சினிமாக்காரங்களையெல்லாம் நம்ப முடியாதுங்க. லேட்டாகும். நாம ட்ரெயினிலேயே போயிறலாம் என்றேன். அவர் கெஞ்ச ஆரம்பித்தார். 'சரின்னு சொல்லிட்டேன் தம்பி. இப்ப முடியாதுன்னா தப்பா நெனச்சுக்குவாறு. சொந்தம் பாருங்க என்றார். ரொம்ப நல்ல மனுஷன். நான் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்' என்று கூறி அவரை அழைத்து வந்தார்.

கசங்கிய சர்ட், லோஃபர் லுக்குடன் இருந்த ஒருவரை எனக்கு அறிமுகம் செய்தார். பார்த்த உடனே பிடிக்கவில்லை. மது வாடை வேறு. என் நெற்றி சுழிந்து என் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. அதை அவர் எதிர்பார்த்தது போல பேசத் தொடங்கினார். " தம்பி. சின்ன வயசுலேயே சினிமா ஆசையிலே இங்க வந்துட்டேன். சினிமாங்கறதால இந்த மாதிரி சின்ன சின்ன கெட்ட பழக்கம் வந்துருச்சு. தப்பா நினைக்காதீங்க" என்றார். நானும் வெற்றிப் பெருமிதத்தில், ' that is OK 'என்றேன். என்னுடன் வந்த பெரியவர், "மாப்ள, இவரும் நம்மூரு தான். பொள்ளாச்சி" எனறார். " பொள்ளாச்சிங்களா, ரொம்ப சந்தோஷம். பொள்ளாச்சில எங்க? என்று நெற்றியை சுருக்கிக் கேட்டார். பொள்ளாச்சி என்றவுடன் நானும் உற்சாகமாகி,"அதாங்க, கடைவீதிக்குப் பக்கம் ராமர் கோவில் வீதி" என்றேன். அய்யோ! அங்க எல்லாரையும் எனக்குப் பழக்கமே, உங்க வீடு..." என்று மீண்டும் நெற்றியைச் சுருக்க, என்னுடைய உற்சாகம் கரை புரண்டோடியது. "சந்துக்குத் தொட்ட மாறி முத வீடுங்க" என்றேன். அவர் தலையில் கை வைத்து எதையோ நினைவு கூற முயற்சிக்க, நான்" அதாங்க, கணக்கய்யர் வீடு, அய்யா கொஞ்சம் குள்ளமா இருப்பாரே" எனறு எடுத்துக் கொடுக்க, ஒரே அன்னியோன்னியம். "சாமியோட மகருங்களா நீங்க? எங்க குடும்பத்துக்கு அய்யா செஞ்சது கொஞ்ச நஞ்சமில்லிங்க" என்றவுடன், என் தந்தையைப் பற்றிய பெருமிதத்தால் நெஞ்சம் விம்மியது.
வெளியே மழை தூற ஆரம்பித்திருந்தது. "பக்கதுல சிவாஜிய வச்சு ஷூட்டிங் நடக்குது. மழைல உங்களுக்கு எதுக்கு சிரமம். பெரியவர் ஆசைப்படறார். அவரை மட்டும் கூட்டிட்டுப் போய் காரை எடுத்துட்டு வந்துடுறேன் " என்று கூறி என்னை விட்டு விட்டு பெரியவரை மட்டும் அந்த ஒறம்பர டைரக்டர் வெளியே கூட்டிச் சென்றான். இதற்குள் மழை பெரிதாக ஊற்ற ஆரம்பித்து விட்டது.

இவருக்காக காத்திருந்து ஸ்டேஷனிலேயே அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். எங்கிருந்தோ பத்து கடாமுடா ஆசாமிகள் என்னை சுற்றி வளைத்தனர். அறண்டு போய் நான் முழிக்க, சென்னை பாஷையில் ஆரம்பித்தனர். '" இன்னாபா, பெரியவரைஇட்டாண்டு போன ஆள உனக்குத் தெரியுமா? " என்று கேட்டனர். நான் தெரியாது என்றவுடன், எப்படி அவங்க கூட அனுப்பினே , என்று அடிக்காத குறையாகக் கேட்டனர். பெரியவருக்கு சொந்தம் என்றேன். யார் சொன்னா என்று அதட்டினர். அவர் தான் சொன்னார் என்றேன். அவர்கள் அடுத்துக் கூறிய விபரங்கள் என்னை மூர்ச்சையடையச் செய்தன. அப்பொழுது சென்னையில் பிரபலமாயிருந்த விஷ ஊசி கொலைகளைச் செய்த கும்பல் போன்றவர்களாம். இரண்டு நாட்களாக எங்களைப் பின் தொடர்ந்து அவரை மட்டும் என்னிடமிருந்து பிரித்து, அவரிடமிருந்த பணத்தையும் வைர மோதிரம் கடுக்கன்களைத் திருடி விட்டு கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தார்களாம். என் நெஞ்சம் பதறத் தொடங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரியவரை எப்படியாவது காப்பாற்று என்று கூறி விட்டு வந்தவர்கள் மறைந்து விட்டனர். யாரை நம்புவது, யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. குருட்டாம் போக்காக வெளியே வந்து தேடினேன். வாலாஜா சாலை அருகில் இருந்த கேட் அருகில் நின்றிருந்தார். டைரக்டரைக் காணவில்லை. சட்டென்று அவரை இழுத்து எதுவும் பேச வேண்டாம் என்று கூறி ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டேன். வண்டியை மவுண்ட் ரோடுக்கு விடச் சொன்னேன். படபடப்பு அடங்கவில்லை. என்னை யாரோ பின் தொடர்வது மாதிரியே ஃபீலிங். பசி வேறு. மவுண்ட் ரோடில் இருந்த கூட்டமான ஓட்டலில் சாப்பிட்டோம். அவர் கேட்ட கேள்விகளுக்கு எதுவும் நான் பதிலளிக்கவில்லை. இரவு தான் இனி வண்டி. சென்ட்ரல் பக்கம் செல்லவே பயமாக இருந்தது. தேவி தியேட்டரில் க்ரேசி பாய்ஸ் ஆப் த கேம்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு டிக்கட் வாங்கி உள்ளே சென்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

பெரியவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, அந்த டைரக்டர் எவ்வளவு காலமாகத் தெரியும் என்பது தான். இன்னிக்குக் காலயில தான் அந்தாளப் பாக்குறேன்
எனறாரே பார்க்கலாம். அப்புறம் எப்படி சொந்தம் அப்டி இப்டின்னு சொன்னீங்கன்னு கோபமாகக் கேட்டேன். நடந்தது இது தான்

நான் டிக்கட் வாங்க நின்றிருந்த போது வெளியே விளம்பரத்திற்காக ஷோ கேஸில் இருந்த பொருட்களைப் பார்த்து வாய் விட்டு தனக்குத் தானே ஏதோ கமெண்ட் அடித்திருக்கிறார். பக்கத்தில் வந்த அவன், நானும் அதையே தான் நெனச்சேன் என்று பேச்சை ஆரம்பித்திருக்கிறான். என்னிடம் போட்டு வாங்கிய மாதிரி, இவரிடமே இவர் பற்றிய அத்தனை விபரங்களையும் கறந்து, மாப்ள லெவலுக்கு இவரை நம்ப வைத்து விட்டான். எனக்கு தலை சுற்றியது. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்னமா நடித்தான்? நானும் நம்பி என்னைப் பற்றிய அத்தனை விபரங்களையும் கூறி உள்ளேனே.

படத்தில் மனம் ஒட்டவில்லை. நல்லபடியாக ஊர் திரும்ப வேண்டுமே என்ற கவலை. மீண்டும் ஸ்டேஷன் போக பயம். ஆனால் போய்த் தான் ஆக வேண்டும். படம் விட்டதும் மெல்ல ஸ்டேஷனுக்குள் பம்பிப் பம்பி சென்றோம். யாரைப் பார்த்தாலும் பயமாக இருந்தது. நல்ல வேளையாக ஏதோ ஒரு வண்டி கோவைக்கு புறப்படத் தயாராக இருந்தது. அடித்துப் பிடித்து டிக்கட் வாங்கி கூட்டத்தில் வண்டியில் இடம் பிடித்த பின்னரே பெருமூச்சு வந்தது.

மேலே எழுதியது அனைத்தும் அக் மார்க் உண்மைகள். இப்பொழுது கூட நெஞ்சு படபடக்கிறது. வண்டியில் அமர்ந்தவுடன் பெரியவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டார். மோசம் போக இருந்தோம். நல்ல வேளை தப்பித்து விட்டோம். ஊர்ல யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. என் மானம் போய் விடும் என்றாரே பார்க்கலாம்.

இவ்வளவு த்ரில்லிங்கான அனுபவத்தை நண்பர்களிடம் கூட கூறாவிட்டால் என் மண்டை வெடித்து சுக்கு நூறாகிவிடுமே!

இப்படியாய் முடிந்த வங்கிப் பணிக்கான முடிவுகளைத் தான் எதிர்பார்த்திருந்தேன். என் துர் அதிர்ஷ்டமோ இல்லை எனது அரசுத் துறையின் அதிர்ஷ்டமோ, 31/12/1975 அன்று கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. ( emergency period) எனனுடைய வங்கிப் பணி கனவும் தகர்ந்தது. கடைசி வரை பணி ஆணை வரவேயில்லை.

Tail piece: என்னிடம் பணம் வாங்கிய நபர் வேலை முடியாததால் ஐநூறு ரூபாயைத் திரும்ப அளித்து விட்டார். என்ன ஒரு நேர்மை!

No comments: